Saturday 19 September 2015

திருவிவிலியத்தில் அணிகள்

        விவிலியத்தை இலக்கியம் எனும் கண்களில் நோக்கினால், அதில் பல்வேறு இலக்கண சுவைகள் நிறைந்திருப்பதை காணலாம். அவேற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று அணிகள்.


அணி என்றால்?

        அணி என்பதற்கு அழகு எனும் பொருளும் உண்டு. செய்யுள்களில் அல்லது படைப்புகளில் காணப்படும் சொல் அல்லது பொருள் அழகினை எடுத்துச் சொல்வதே அணி. அணிகள் பல வகை என்றாலும், நம் விவிலியத்தில் காணப்படும் அணிகளில் மூன்றினை இப்போது காணலாம்.

இல்பொருள் உவமை அணி

        இல்லாத ஒன்றை, அல்லது நிகழ்வதற்கு சாத்திய கூறுகள் அற்ற ஒன்றை எடுத்துக் காட்டாகவோ, உவமையாகவோ அல்லது ஒப்பிட்டோ கூறுவது இல்பொருள் உவமை அணி, என இலக்கணம் கூறுகிறது. இந்த அணி விவிலியத்தில் எங்கு பயன்படுத்தப்படுகிறது என பார்த்தால், [மாற்கு 10 : 25] -ல் செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவதை குறித்து, “ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது போல", என ஒப்புமையாக கூறப்பட்டுள்ளது. ஒரு சாதாரண ஊசியின் காதினுள், உருவத்தில் அதைவிட மிக மிக பெரியதான ஒட்டகம் நுழைவது என்பது, கற்பனையில் மட்டுமே சாத்தியமானது. இங்கு இல்பொருள் உவமை அணி மிக நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது.


விரோதவணி (விரோத அணி)

        'ஒரு படைப்பு அல்லது செய்யுளின் நேரான கருத்ததை தராமல் மாறுபட்ட கருத்ததை குறிப்பிடுவது விரோதவணி', என்று இலக்கணம் சொல்கிறது. இந்த அணியின் முப்பிரிவுகளில் ஒன்றான பொருள் விரோத அணியை, மாற்கு நற்செய்தியில் காணலாம். [மாற்கு 7 : 27] -ல் "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுவது முறையல்ல", என இயேசு கூறுகிறார்.

        இந்நிகழ்வில், கிரேக்க பெண்ணின் மகளை குணப்படுத்த வேண்டாம் என்பது அவரது எண்ணம் அன்று. அந்த பெண்ணின் நம்பிக்கையை சோதிக்கும் பொருட்டே அவ்வாறு கூறினார். இவ்வாறு, மனதில் உள்ள கருத்துக்கு மாறான அல்லது விரோதமான பொருள் உடைய சொற்களை கூறுவதால், இதில் உள்ள பொருள் விரோத அணியின் பயன்பாட்டின் சிறப்பை தெரிந்து கொள்ளலாம்.


உவமை அணி

        இறுதியாக நாம் கணவிருக்கும் உவமை அணி, திருவிவிலியத்தில் பற்பல இடங்களில் காணப்படுகிறது. மனதில் உள்ள ஒரு கருத்ததை உணர்த்துவதற்கு உவமையை அல்லது எடுத்துக்காட்டை கூறி, பின்னர் கூற வந்த பொருளை எடுத்துரைப்பது உவமை அணி.

        இயேசு உவமையை கையாளுவதில் வல்லவர் எனலாம். புதிய ஏற்பாடு முழுதும் காணப்படும் பல்வேறு உவமைகள் இதற்கு சாட்சிகளாய் உள்ளன. எடத்துக்காட்டாக, [மத்தேயு 13: 3 – 23] -ல், விதைப்பவர் விதைக்கும் விதைகள் பல்வேறு இடங்களில் விழுகின்றன என்ற வசனம் வருகிறது. இதில் விதைகளுக்கு இறைவார்த்தையையும், அது விழும் இடங்களுக்கு, இறைவார்த்தையை கேட்போரையும் ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது. இதை உவமை அணிக்கு சிறந்த எடத்துக்காட்டாக கூறலாம்.

        இந்த கட்டுரையில் விவிலியத்தில் உள்ள அணிகளை குறிப்பிடுவதன் மூலம், தமிழ் இலக்கண சிறப்புகளும், விவிலியத்ததை இலக்கியமாக பார்க்கும் பார்வையும் நம் வீட்டில் பிள்ளைகளுக்கு வேரூன்றியிருக்கும் என்னும் நம்பிக்கையில் கட்டுரையை முடிக்கிறேன்.

No comments:

Post a Comment