Monday 27 July 2015

வட்டார வழக்கு

        வட்டார வழக்கு குறித்து பலருக்கும் பல்வேறு கருத்துகள் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலர் வட்டர வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, சிலர் அதை பெருமையாக நினைக்கிறார்கள், சிலர் அது கொச்சையானது என கருதுகிறார்கள்.

        முதலில், நம் குழந்தைகளுக்கு வட்டர வழக்கு பற்றி விளக்கும் கடமையும் நமக்கு
உள்ளது. வட்டார வழக்கு என்பது ஒருகுறிப்பிட்ட இடத்தில் ஒரு மொழி எவ்வாறு பேசப்படுகிறது, அதன் உச்சரிப்பு எப்படி இருக்கிறது என்பதை வைத்தே அமையும். எடுத்துக்காட்டாக, குமரி மாவட்டத்தில் பேசப்படுவது போல தமிழ், சேலம் மற்றும் கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் பேசப்படுவது இல்லை. சென்னையில் வேறு விதமான தமிழ் உச்சரிப்பு உள்ளது. இது போலவே மலையாளமும் திருவனந்தபுரம், கோழிக்கோடு, திருச்சூர், காசர்கோடு போன்ற பகுதிகளில் வெவ்வேறாக உச்சரிக்கப்படுகிறது. ஆங்கிலத்திலும், இந்தியிலும் உலகின் பல்வேறு மொழிகளிலும் இது போலவே பல்வேறு வட்டார வழ்க்குகள் உள்ளன.


வரலாறு என்ன சொல்கிறது?

        வரலாற்றை பின்னோக்கி பார்த்தால், வெளிநாட்டு படை எடுப்புகளும் வட்டார வழக்கில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்துள்ளன என புரியும். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், தன் 'இரவு' எனும் நூலில், "நாயக்கர்கள் மதுரையில் ஆட்சியை பிடித்த பிறகு, பல்வேறு தெலுங்கு மக்க்ள் ஆந்திராவில் இருந்து புலம் பெயர்ந்து இங்கு வந்தனர்", என குறிப்பிட்டுள்ளார். அவர்களது தெலுங்கு கலப்பு தமிழனின் உச்சரிப்பையே பின்னர் மாற்றியது. அந்த தெலுங்கு கலந்த தமிழ் உச்சரிப்பிலிருந்து தப்பித்தவை கொங்கு மண்டலமும், குமரி மாவட்டமும்தான். ஏனெனில், அப்போது குமரி மாவட்டம் சேர மன்னர்கள் ஆட்சியிலும், பின்னர் திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சியில் இருந்தது.

        அதற்கு முன், தமிழ் உச்சரிப்பு குமரி மாவட்ட தமிழ் போலவும், கொங்கு தமிழ் போலவும், மலையாளம் போலவும், இலங்கைத் தமிழ் போலவும் ஒரு வித இராக நயத்தோடு தான் பேசப்பட்டது. இதைத்தான் நாம் இன்று இழுத்து பேசுவதாக நினைக்கிறோம். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் வீர வசனங்கள் உண்மையான் தமிழ் உச்சரிப்பு கொண்டவை என நாம் நினைத்தால், அது தவறே. உண்மையில் சங்க காலத்தில் தமிழ் உச்சரிப்பு குமரி மாவட்ட தமிழ் போலத் தான் இருந்தது.


வட்டார வழக்கு கொச்சையானதா?

        என்னிடம் பலர், “இழுத்து பேசாத டீசன்டா பேசு", என சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் ஒருவர் தன் வட்டார வழக்கில் பேசுவது தான் எதார்த்தம் ஆகும். பொதுவாக எந்த சமூகத்தினர் பிரபலமாக இருக்கிறார்ளோ, அல்லது எவர் கை மேலோங்கி உள்ளதோ அவர்களை மற்றவர்கள் பின் தொடர்வது உலக நடைமுறை. எடத்துக் காட்டாக, ஆங்கிலேயர் ஆட்சியில் நாம் இருந்தபோது, ஆங்கிலம் பேசுவதை கௌரவமாக நினைத்தவர்கள் உண்டு. இன்றும் அது பல இடங்களில் காணப்படுகிறது. மெக்சிகோவில், தம் தாய் மொழியில் பேசுபவர்களை விட, ஸ்பானிஷ் மொழியில் பேசுபவர்களே அதிகம். இது போன்ற ஒரு காரணத்தால் தான் குமரி மாவட்டத்தில் குறிப்பாக கடலோர கிராமங்களில் வட்டார வழக்கில் பேசுவது கொச்சையானது என கருதியிருக்கலாம். ஆனால், உண்மையில் அப்படி நினைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்றே படுகிறது. மேற்கூறியபடி சொல்லப்போனால் நாம் தான் உண்மையில் தாய் தமிழை சரியாக உச்சரிக்கிறோம்.

No comments:

Post a Comment